ரூ.14 லட்சம் மதிப்பு கழுதைகளை காணோம்...! வினோத புகாரால் போலீசாருக்கு தலைவலி


ரூ.14 லட்சம் மதிப்பு கழுதைகளை காணோம்...! வினோத புகாரால்  போலீசாருக்கு தலைவலி
x
தினத்தந்தி 31 Dec 2021 8:36 AM GMT (Updated: 31 Dec 2021 11:37 AM GMT)

கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது அவற்றைக் காணவில்லை. இதுகுறித்து கழுதையின் உரிமையாளர்களுக்கு சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில்  இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  ஹனுமன்கர் மாவட்டத்தில்  கால்வாய் பகுதிகளில் மண் மற்றும் பொருள்களை சுமக்க கழுதைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மெகா கழுதை கண்காட்சியை நடத்தும் 500 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட ராஜஸ்தானில் 23,000 கழுதைகள் உள்ளன, அவை பெரும்பாலும் செங்கல் சூளைகளில் செங்கல் கொண்டு செல்லவும் சக்கர வண்டிகளை இழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

சமீபத்தில் ஹனுமன்கர் மாவட்டத்தில் பொதி சுமக்க பயன்படுத்திய கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது அவற்றைக் காணவில்லை. இதுகுறித்து கழுதையின் உரிமையாளர்களுக்கு சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர். வெவ்வேறு இடங்களில் ரூ 14 லட்சம் மதிப்புள்ள  70-க்கும் மேற்பட்ட கழுதைகளைக் காணவில்லை . ஒவ்வொரு கழுதயின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் என்று கூறி குய்யன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் முதலில் இந்த புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கழுதை உரிமையாளர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து போலீஸ் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை கழுதைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டது.  15 கழுதைகளைக் கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடமும் ஒப்படைக்க  கழுதைகளை நிறுத்தி அடையாள அணிவகுப்பு நடத்தி உள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கும்போது ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உரிமையாளர்கள் தங்களுடைய கழுதைகளை பிங்கு, பபுலு என்று பெயர் சொல்லி அழைத்திருக்கின்றனர். அதற்கு எந்தக் கழுதைகளும் மறுமொழி தெரிவிக்கவில்லை. இதையடுத்து, 'இவை எங்களுடைய கழுதைகள் அல்ல' என்று கூறி கழுதை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். 

உரிமையாளர்கள், தங்கள் கழுதைகளுக்கு பெயர் வைத்து அழைத்து பழக்கப்படுத்தியுள்ளது காவல்துறையினருக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் காணாமல் போன கழுதைகளைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. 

உரிமையாளர்களின் அலட்சியத்தாலேயே கழுதைகள் காணாமல் போயுள்ளதாகவும், கழுதைகள் ஒரேமாதிரி இருப்பதால் அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மறுபுறம், கழுதைகள் காணாமல் போனதால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கழுதைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'தங்களுடைய கழுதைகள்தான் வேண்டும், வேறு கழுதைகள் வேண்டாம்' என்றும் 'கழுதைகள் கிடைக்கவில்லை என்றால் பெரும் போராட்டம் நடக்கும்' என்றும்  உரிமையாளர்கள் எச்சரித்துள்ளது காவல்துறைக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது

Next Story