33% இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு இதுவரை இயற்றாதது ஏன்? ஆர்.எஸ்.பாரதி கேள்வி


33% இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு இதுவரை இயற்றாதது ஏன்? ஆர்.எஸ்.பாரதி கேள்வி
x
தினத்தந்தி 3 Feb 2022 9:04 AM GMT (Updated: 3 Feb 2022 9:04 AM GMT)

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு இதுவரை இயற்றாதது ஏன்? என மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி,

'மத்திய அரசு, கொரோனா காலத்தில் மக்களைக் காக்கத் தவறிவிட்டது. டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பல கிமீ தூரம் வரை நடந்தார்கள். ஒரு பெண் தனது குழந்தையுடன் உணவின்றி பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் காட்சியைப் பார்த்திருப்போம். அப்போது மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது?

முதல் கொரோனா அலையில் இருந்து மத்திய அரசு பாடம் கற்கவில்லை. அடுத்தடுத்த அலைகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அளவில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தேவை; நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை' என்று பேசினார்.

தொடர்ந்து, ஒரு காலத்தில் மருத்துவத்துறையில் 95% பேர் உயர் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.  இட ஒதுக்கீட்டுக்காக தமிழ்நாடு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே முதன்முதலில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது என  ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

இதனையடுத்து பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு இதுவரை இயற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

Next Story