மந்திரி நவாப் மாலிக் மனு மீது 15-ந் தேதி ஐகோர்ட்டில் தீர்ப்பு


மந்திரி நவாப் மாலிக் மனு மீது 15-ந் தேதி ஐகோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 12 March 2022 8:30 PM GMT (Updated: 12 March 2022 8:42 PM GMT)

அமலாக்கத்துறைக்கு எதிராக மந்திரி நவாப் மாலிக் மனு மீதான தீர்ப்பை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மாநில சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக் கடந்த மாதம் 23-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளின் சொத்துகளை வாங்கி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவர் வக்கீல் மூலம் மும்பை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், நவாப் மாலிக் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணையின் போது நவாப் மாலிக் தரப்பு வக்கீல், "நவாப் மாலிக் கைது செய்யப்பட்டது மற்றும் அதற்கு பின்னர் அவர் காவலில் அடைக்கப்பட்டது சட்டவிரோதமானது. எனவே அவரின் கைது ரத்து செய்யப்பட வேண்டும். அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும்" என்றார்.

இதேபோல அமலாக்கத்துறை தரப்பில், விதிகளை பின்பற்றியே நவாப் மாலிக் கைது செய்யப்பட்டதாகவும், அவரை சிறப்பு கோர்ட்டு உரிய காரணங்களோடு தான் அமலாக்கத்துறை, நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதாக கூறியது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பி.பி. வாரலே, எஸ்.எம். மோதக் மனு மீதான தீர்ப்பை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story