கர்நாடகா: ‘ஹிஜாப்' வழக்கில் இன்று தீர்ப்பு - பெங்களூருவில் 144 தடை உத்தரவு...!!

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெங்களூருவில் ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு கூற உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க பெங்களூரு, மங்களூரு, கடலோர மாவட்டங்கள் உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன், போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று மாலையில் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளி, கல்லூரிகளை சுற்றி முன் எச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும், போராட்டங்கள் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்க கூடாது என்றும் துணை போலீஸ் கமிஷனர்களுக்கு, கமல்பந்த உத்தரவிட்டுள்ளார்.
பினனர் நிருபர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர் கமல்பந்த், “ஹிஜாப் விவகார வழக்கில் நாளை (அதாவது இன்று) தீர்ப்பு கூறப்படுகிறது. தீர்ப்பு வெளியாவதையொட்டி பெங்களூருவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகர் முழுவதும் நாளை (இன்று) காலை முதல் வருகிற 21-ந் தேதி வரை ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 5 பேருக்கு மேல் கூடுவதற்கோ, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கோ அனுமதி கிடையாது. பாதுகாப்பு பணியில் கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை உள்பட 10 ஆயிரம் போலீசார் ஈடுபட இருக்கிறார்கள். பெங்களூரு நகர மக்கள் இதுவரை போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளனர். ஹிஜாப் விவகார வழக்கில் தீர்ப்பு வெளியான பின்பும் பெங்களூரு மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story