பஞ்சாப் சட்டசபையில் புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

பஞ்சாப் சட்டசபையின் ஒருநாள் சிறப்புக்கூட்டத்தில் புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
சண்டிகார்,
பஞ்சாப்பில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி மேற்கொண்டது. கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த பகவந்த் மான் (வயது 48), இதற்கான பணிகளை மேற்கொண்டார்.
பஞ்சாப்பை சேர்ந்த பிரபல சுதந்திர போராட்ட வீரரான பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கத்கர் காலனில் பதவியேற்பு விழாவை நடத்த அவர் நடவடிக்கை மேற்கொண்டார்.
தேர்தலுக்குப்பின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூடி பகவந்த் மானை சட்டமன்ற கட்சித்தலைவராக (முதல்-மந்திரி) தேர்வு செய்தனர். அதைத்தொடர்ந்து கவர்னரை சந்தித்து மாநிலத்தில் புதிய அரசை அமைக்க அவர் உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், பகவந்த் மானை புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி நேற்று மதியம் 1.25 மணிக்கு கத்கர் காலனில் பதவியேற்பு விழா நடந்தது. இதில் பகவந்த் மானுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் பங்கேற்று பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பகவந்த் மான் மட்டும் பதவியேற்றுக்கொண்டார். மந்திரிகளின் பதவியேற்பு பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பஞ்சாப் சட்டசபையின் ஒருநாள் சிறப்புக்கூட்டத்தில் புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இடைக்கால சபாநாயகர் இந்தர்பீர் சிங் நிஜ்ஜார் அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முன்னதாக முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட பகவந்த் மான் பேசும்போது, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தனது அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் அனைத்தும் ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில் இருப்பதுபோன்று தரம் உயர்த்தப்படும் எனக்கூறிய பகவந்த் மான், புதிய அரசின் பணிகள் அனைத்தும் இன்று (நேற்று) முதலே தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.
Related Tags :
Next Story