தெலங்கானாவில் வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பேர் உயிரிழப்பு


தெலங்கானாவில் வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 May 2022 5:48 AM GMT (Updated: 9 May 2022 5:48 AM GMT)

தெலங்கானாவில் வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் கமரெட்டி மண்டலம் பகுதியை சேர்ந்த 28 பேர் எல்லா ரெட்டி, பிட்லம் பகுதியில் நடந்த சந்தையில் பொருட்கள் வாங்க மினி லாரியில் சென்றனர். மினி லாரியை சாயி என்பவர் ஓட்டிச் சென்றார். சந்தையில் பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் மினி லாரியில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர்.

பிட்லம் பகுதியிலிருந்து நிஜாம் சாகருக்கு நவதானியங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்துகொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், மினி லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில் மினி லாரியின் முன்பகுதி நொறுங்கியது. மினி லாரியில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறி துடித்தனர்.

அப்பகுதி பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு எல்லா ரெட்டி, பான்ஸ் வாடா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மினி லாரி டிரைவர் சாய், லட்சவம்மா, தேவய்யா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கம்சவம்மா, கேசவய்யா உள்ளிட்ட 6 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

மேலும் 21 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து எல்லா ரெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story