இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குள் 6 ஜி நெட்வொர்க் சேவை: பிரதமர் மோடி


இந்தியாவில்  10 ஆண்டுகளுக்குள் 6 ஜி நெட்வொர்க் சேவை:  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 May 2022 2:19 PM GMT (Updated: 17 May 2022 2:19 PM GMT)

உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா உள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையமான ‘ட்ராய்’ அமைப்பின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.  இதில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: 

உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா உள்ளது.  இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை இரண்டில் இருந்து 200 ஆக அதிகரித்துள்ளது.

21-ம் நூற்றாண்டில் நாட்டின் முன்னேற்றத்தை தொலைத்தொடர்பு தீர்மானிக்கும். 5-ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அடுத்த 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை ரூ.34 லட்சம் கோடியாக உயர்த்தும். 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் ஆட்சி, வாழ்வின் எளிமை, வணிகம் போன்றவற்றிலும் சாதகமான மாற்றங்களை கொண்டுவர போகிறது.

விவசாயம் சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்கும்.  எனவே, 5 ஜி தொழில்நுட்பத்தை விரைவாக கொண்டு வருவது அவசியம்.  10 ஆண்டுகளுக்குள்   6ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவர இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 5 ஜி மற்றும் 6 ஜி நெட்வொர்க்குகள் அதிவேக இணையத்தை மட்டும் வழங்காது. வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.” என்றார். 


Next Story