ஆந்திராவில் ரயில்கள் மோதி விபத்து:6 பேர் பலி.. பலர் காயம் என தகவல்


ஆந்திராவில் ரயில்கள் மோதி விபத்து:6 பேர் பலி.. பலர் காயம் என தகவல்
x
தினத்தந்தி 29 Oct 2023 3:15 PM GMT (Updated: 29 Oct 2023 4:51 PM GMT)

ஆந்திராவில் பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 6பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒடிசாவில் கடந்த ஜுன் மாதம் 2 ஆம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 280 பேர் பலியாகினர். இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்றாக ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்து அமைந்தது. ஒடிசா ரயில் விபத்து சம்பவம் ஏற்படுத்திய ரணமே மக்கள் மத்தியில் இன்னும் முழுமையாக அகலாத நிலையில், ஆந்திராவில் இன்று ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 15 பேர் வரை காயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த ரயில் விபத்து குறித்த விவரம் வருமாறு: விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரயில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் பலாசா ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அலறினர்.

ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில்6 பேர் பலியானதாகவும் பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில்கள் விபத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்ததாக ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி அலுவலகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டக பள்ளி ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில்கள் விபத்து குறித்து முதல் மந்திரி அதிர்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, காயம் அடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.



Next Story