மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் - மீட்பு பணிகள் தீவிரம்


மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் - மீட்பு பணிகள் தீவிரம்
x

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் நேற்றைய தினம் 8 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிறுவன் தற்போது 43 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாகவும், ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் வழங்கப்பட்டு சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு பணியில் 3 மாநில மீட்பு படை அணிகள் மற்றும் ஒரு தேசிய மீட்பு படை அணி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து 15 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி தோண்டப்பட்டு, சிறுவனை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story