மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அஜித் தோவல் ஆலோசனை பயங்கரவாதத்துக்கு நிதியுதவியை தடுக்க வலியுறுத்தல்


மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அஜித் தோவல் ஆலோசனை  பயங்கரவாதத்துக்கு நிதியுதவியை தடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Dec 2022 9:15 PM GMT (Updated: 6 Dec 2022 9:15 PM GMT)

மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

டெல்லியில், இந்தியா-மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார்.

மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதர்களும் பங்ேகற்றனர்.

பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள பொதுவான செயல்திட்டம் வகுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், அஜித் ேதாவல் பேசியதாவது:-

மத்திய ஆசிய நாடுகள், இந்தியாவின் அண்டை நாடுகள். இந்த நாடுகளுக்கு இந்தியா உயர் முன்னுரிமை அளிக்கிறது. இந்த பிராந்தியத்தில் ஒத்துழைக்கவும், முதலீடு ெசய்யவும், இணைப்பு உருவாக்கவும் இந்தியா தயாராக இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் விவகாரம், நம் அனைவருக்குமே கவலையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. நிதியுதவி அளிப்பது பயங்கரவாதத்துக்கு ரத்தம் ஏற்றுவது போல் உள்ளது. ஆகவே, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பயங்கரவாதம் தொடர்பான பிரகடனங்களில் கூறப்பட்டுள்ள கடமைகளை ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும். பயங்கரவாத செயல்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ எவ்வகையான உதவியும் ெசய்யக்கூடாது.

பிற நாடுகளின் வழியாக திட்டங்களை மேற்கொள்ளும்போது, அந்த நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story