அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு


அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
x

நவிமும்பை அருகே மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

மராட்டிய அரசு சார்பில் 'மராட்டிய பூஷண் விருது' வழங்கும் விழா நேற்று நவிமும்பை கார்கரில் உள்ள மைதானத்தில் நடந்தது. விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மராட்டிய மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

ஆன்மிக தலைவரும், சமூக ஆர்வலருமான அப்பாசாகிப் தர்மாதிகாரிக்கு மராட்டிய பூஷண் விருதை மத்திய மந்திரி அமித்ஷா வழங்கி கவுரவித்தார்.

சுமார் 306 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட மைதானத்தில் நடந்த விழாவில், அப்பாசாகிப் தர்மாதிகாரியின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொள்ள மக்கள் காலையிலேயே சாரை, சாரையாக வரத்தொடங்கினர். ஆனால் விழா காலை 11.30 மணியளவில் தான் தொடங்கியது. இதனால் அவர்கள் வெயிலில் காத்திருக்க நேரிட்டது.

பங்கேற்பாளர்களுக்கு திறந்தவெளியில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாக தெரிகிறது. கொட்டகைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. அந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுவெளியில் அமர்ந்து இருந்த பார்வையாளர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பலர் நீர்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மொத்தம் 123 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் பலரின் உடல்நிலை மோசமாக இருந்தது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் பல்வெல்லில் உள்ள எம்.ஐி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 11 பேர் சிகிச்சை பலனின்றி இரவில் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. மேலும், 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இருந்தும் மருத்துவமனையில் அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆஸ்பத்திரிக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

இது குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மத்திய மந்திரி கலந்துகொண்ட விழாவில்13 பேர் பலியான சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story