வரலாற்றைத் திரிப்பது எதிர்கால சந்ததியினருக்கு தவறான செய்தியை கொடுக்கும் - ஜிதேந்திர அவாத்


வரலாற்றைத் திரிப்பது எதிர்கால சந்ததியினருக்கு தவறான செய்தியை கொடுக்கும் - ஜிதேந்திர அவாத்
x

வரலாற்றைத் திரிப்பது எதிர்கால சந்ததியினருக்கு தவறான செய்தியைக் கொடுக்கும் என்று மராட்டிய முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் 'ஹர் ஹர் மகாதேவ்' என்ற திரைப்படத்தில் சத்ரபதி சிவாஜியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து, கடந்த 7-ந் தேதி இரவு தானேயில் ஹர், ஹர் மகாதேவ் படம் ஓடி தியேட்டருக்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த ஜித்தேந்திர அவாத், படம் பார்த்து கொண்டிருந்தவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி படத்தை திரையிடவிடாமல் தடுத்தனர்.

இந்த சம்பவத்தின் போது சில பார்வையாளர்கள் ஜிதேந்திர அவாத் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகின. இந்த சம்பவம் தொடர்பாக ஜித்தேந்திர அவாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வர்தக் நகர் போலீசார் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

அதன்பின், தானே மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஜித்தேந்திர அவாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனையடுத்து, 'ஹர் ஹர் மகாதேவ்' படக்காட்சியை தடுத்து நிறுத்திய விவகாரத்தில் ஜாமீன் வழங்கக்கோரி ஜித்தேந்திர அவாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜித்தேந்திர அவாத் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஜாமீன் வழங்கி தானே செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.

ஜாமீன் பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிதேந்திர அவாத், சத்ரபதி சிவாஜியின் வரலாற்றைத் திரித்து திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது மன்னர் சிவாஜிக்கு களங்கம் ஏற்படுத்தியது மட்டுமின்றி, மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதை பொறுத்துக்கொள்ள முடியாது.

வரலாற்றை திரித்து முன்வைப்பது எதிர்கால தலைமுறைக்கு தவறான செய்தியை கொடுக்கும், இது நிறுத்தப்பட வேண்டும். தணிக்கைக் குழு, திரைப்படத்திற்கு சான்றிதழ் அளிக்கும் போது, ​​அதில் உள்ள வரலாற்று உண்மைகளையும் சரிபார்க்க வேண்டும்.

வரலாற்றைத் திரித்து வெளியிடும் திரைப்படங்களுக்கு குரல் கொடுப்பதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும். வரலாற்று உண்மைகளை திரித்து கூறுவதுக்கு எதிராக போராடுவதால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story