மின்கசிவினால் வீட்டில் தீவிபத்து; ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


மின்கசிவினால் வீட்டில் தீவிபத்து; ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 13 Oct 2022 7:00 PM GMT (Updated: 13 Oct 2022 7:00 PM GMT)

கார்கலா அருகே மின்கசிவினால் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது.

மங்களூரு;


உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா விவேகானந்த நகரில் தொழிலாளி ஒருவரின் வீடு உள்ளது. இந்த நிலையில் தொழிலாளி வேலைக்காக வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து அவர்கள் உடனே கார்கலா போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினா் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கார்கலா போலீசார் வந்தனர். பின்னர் தீவிபத்திற்கான காரணம் குறித்து வீட்டிற்குள் சென்று பார்வையிட்டனர்.

அப்போது வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகதான் தீவிபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story