தெலுங்கானாவில் சட்டவிரோத முற்றுகை; ரேணுகா சவுத்ரி, 200 பேருக்கு எதிராக வழக்கு


தெலுங்கானாவில் சட்டவிரோத முற்றுகை; ரேணுகா சவுத்ரி, 200 பேருக்கு எதிராக வழக்கு
x

தெலுங்கானாவில் போராட்டம் நடத்த சட்டவிரோத முற்றுகையில் ஈடுபட்ட ரேணுகா சவுத்ரி மற்றும் 200 பேருக்கு எதிராக ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



ஐதராபாத்,



நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த 3 தினங்களாக தீவிர விசாரணை நடத்தினர்.

மூன்றாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து நாளை விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் டெல்லி உட்பட நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டங்களுக்கு தேவையான அனுமதியை பெறவில்லை என்று டெல்லி போலீஸ் தரப்பு குற்றம் சாட்டியது. காங்கிரசாரின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி அமலாக்க துறை அலுவலக பகுதியை சுற்றி சி.ஆர்.பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிரப்பு தெரிவித்து, தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் போராட்டங்கள் நடந்தன.

இதில், தெலுங்கானாவில் நடந்த போராட்டத்தில் காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய பெண் மந்திரியான ரேணுகா சவுத்ரி, தன்னை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது, ஆண் காவலர் ஒருவரது சட்டை காலரை பிடித்து இழுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போலீசாருடன் சவுத்ரி வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். அதனை மற்ற பெண் காவலர்கள் தடுத்தனர். பின்னர் அவரை அந்த பகுதியில் இருந்து பெண் காவலர்கள் அழைத்து சென்றனர். அவரை வேனில் ஏற்றி சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி பின்னர் ரேணுகா சவுத்ரி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நீங்கள் முழு வீடியோவையும் பாருங்கள். போலீசார் திடீரென தள்ளி விட்டனர். பின்னால் இருந்து நான் முன்னே தள்ளப்பட்டேன். இதனால், நான் கீழே விழுந்து இருக்க கூடும். அதனால், காவலரின் தோள்பட்டையை பிடிக்க நான் முயற்சி செய்தேன் என கூறியுள்ளார்.

கீழே விழுந்து விட கூடாது என்பதற்காகவே நான் காவலரின் காலரை பிடித்தேன் என அவர் கூறியுள்ளார். அதன்பின் அவர் கூறும்போது, அதேவேளையில் காங்கிரஸ் பெண் தொண்டர்களிடம் ஆண் காவலர்கள் தவறாக நடந்து கொண்டனர் என்று குற்றச்சாட்டும் கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் கட்டுப்பாடான முறையில் போலீசார் நடந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. நீங்கள் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து, தலைவர்களை மிதிக்கிறீர்கள். பெண் தலைவர்களை பிடித்து இழுக்கிறீர்கள். எங்களது தலைவர்கள் மீது தடியடி நடத்துகிறீர்கள். ஆனால், நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி பஞ்சகுட்டா காவல் துணை ஆய்வாளர் உபேந்தர் பாபு அளித்த புகாரின்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் ரேணுகா சவுத்ரி மற்றும் 200 மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், ரேணுகா மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவாகி உள்ளன.

அவர் அந்த புகாரில், 5 காங்கிரஸ் பெண் தொண்டர்களுடன் ரேணுகா, ராஜ் பவன் நோக்கி முன் அனுமதி இன்றி புறப்பட்டு செல்ல தயாரானார். அதனால், பெண் கான்ஸ்டபிள்களை கவனமுடன் இருக்க கூறினேன்.

அவர்கள் காவல் தடுப்பான்களை நெருங்கியதும் கலைந்து போகும்படி கூறினேன். ஆனால், அவர் கோபமுடன் வழியை விடும்படி கூறி மிரட்டினார். உயரதிகாரிகள் அறிவுரையின்பேரில் பெண் காவலர்கள் அவரை அழைத்து செல்ல தயாரானார்கள். ஆனால், அவர்களை அவர் தடுத்து, தள்ளி விட்டார். என் மீதும் தாக்குதல் நடத்தினார். சட்டை காலரை பிடித்து கொண்டார். பின்பு தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கினார் என தெரிவித்து உள்ளார்.

இதன்பின்பு, ரேணுகா மற்றும் காங்கிரஸ் தொண்டர்களை உடனடியாக பெண் போலீசார் அப்புறப்படுத்தி அழைத்து சென்றனர்.


Next Story