சிவமொக்காவில் லாரிகளில் இருந்து 200 லிட்டர் டீசல் திருட்டு; 5 பேர் கைது


சிவமொக்காவில் லாரிகளில் இருந்து 200 லிட்டர் டீசல் திருட்டு; 5 பேர் கைது
x

சிவமொக்காவில், லாரிகளில் இருந்து 200 லிட்டர் டீசல் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா;

லாரிகளில் டீசல் திருட்டு

சிவமொக்கா நகரை ஒட்டிய சோகானே பகுதியில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலைய கட்டுமான பணிக்காக பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளில், மர்மநபர்கள் டீசல் திருடி சென்று இருந்தனர்.

அந்த லாரிகளில் இருந்து 200 லிட்டர் டீசலை, மர்மநபர்கள் திருடியுள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.17,500 இருக்கும். லாரிகளில் டீசல் திருடிக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி செல்வதை காவலாளி பார்த்துள்ளார்.

இதுபற்றி அவர், விமான நிலைய கட்டுமான பணி இயக்குனரிடம் தெரிவித்தார். இதைதொடர்ந்து துங்கா நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாாின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

5 பேர் கைது

இந்த நிலையில் லாரிகளில் டீசல் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சிவமொக்கா தாலுகா தும்மள்ளிதாண்டா பகுதியை சேர்ந்த கிரண், சந்தீப், கவுஷிக், ஈஸ்வர் மற்றும் யுவராஜ் ஆகியோர் என்பதும், இவர்கள் தான் லாரிகளில் டீசல் திருடியது தெரியவந்தது.

கைதான 5 பேரிடமும் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story