டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயன்ற வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர் நாளை ஆஜராக நோட்டீஸ்


டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயன்ற வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர் நாளை ஆஜராக நோட்டீஸ்
x

4 டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், பா.ஜனதா பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.



ஐதராபாத்,

தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆளுங்கட்சியாக இருக்கிறது. கடந்த மாதம், அந்த கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களை சந்தித்த 3 பேர், பா.ஜனதாவில் சேர்ந்தால் தலா ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசியதாக புகார் எழுந்தது. அந்த 4 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ரோகித் ரெட்டி அளித்த புகாரின்பேரில், ராமச்சந்திர பாரதி, நந்தகுமார், சிம்மயாஜி சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை தெலுங்கானா மாநில அரசு அமைத்தது. அக்குழு தனது விசாரணை அடிப்படையில், பா.ஜனதா பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷை குற்றவாளியாக சேர்த்துள்ளது. அவருடன் கேரளாவை சேர்ந்த ஜக்கு சாமி, துஷார் வெல்லபள்ளி மற்றும் பி.சீனிவாஸ் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனிகோர்ட்டில் தாக்கல் செய்த விளக்க அறிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு இதை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 21-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சந்தோஷ் உள்பட 4 பேருக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், சீனிவாஸ் மட்டும் ஆஜரானார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து, தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், பி.எல்.சந்தோஷுக்கு சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், நாளையோ (சனிக்கிழமை) அல்லது 28-ந்தேதியோ விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளது.


Next Story