மல்பே அருகே ஹூட் கடற்கரையில் சம்பவம்; ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்கள் சாவு


மல்பே அருகே ஹூட் கடற்கரையில் சம்பவம்; ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்கள் சாவு
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:45 PM GMT)

மல்பே அருகே ஹூட் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு;

சுற்றுலா

உடுப்பி மாவட்டம் மல்பே அருகே உள்ள ஹூட் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரைக்கு மணிப்பாலில் உள்ள அகாடமி ஒன்றில் இருந்து மாணவர்கள் சிலர் விடுமுறையையொட்டி சுற்றுலா வந்திருந்தனர். அவர்களில் பெங்களூருவை சேர்ந்த நிஷாந்த், சண்முகா மற்றும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீகர் குப்தா ஆகிய 3 பேரும் சோ்ந்து கடலில் குளிக்க சென்றனர். அப்போது கடலில் திடீரென ராட்சத அலை வந்துள்ளது.

இந்த அலையில் 3 மாணவர்களும் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள், உடனடியாக கடலோர போலீஸ் படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் போலீஸ் படையினர் படகு மூலம் கடலுக்குள் சென்று மாணவர்களை மீட்க முயன்றனர்.

பிணமாக மீட்பு

இதில் பெங்களூருவை சோ்ந்த நிஷாந்த் மற்றும் சண்முகா ஆகிய 2 மாணவர்கள் மட்டும் பிணமாக மீட்கப்பட்டனர். ஸ்ரீகரை காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடலோர காவல் படை போலீசார் அவர்கள் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காணாமல் ேபான மாணவர் ஸ்ரீகரை தேடும் பணியில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும், போலீசாரும், கடலோர காவல் படையினரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால் இரவு வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

கரை ஒதுங்கியது

இந்த நிலையில் மாணவர் ஸ்ரீகரின் உடல் நேற்று கரை ஒதுங்கியது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் மல்பே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா கூறுகையில், 'குளிக்க தடை செய்யப்பட்ட பகுதியில் மாணவர்கள் குளித்துள்ளனர். அதனால் இந்த சம்பவம் நடந்துள்ளது' என்று கூறினார்.


Next Story