உலகளாவிய மருத்துவ சுற்றுலா மையமாக இந்தியா விரைவில் மாறும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி


உலகளாவிய மருத்துவ சுற்றுலா மையமாக இந்தியா விரைவில் மாறும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
x

உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ சுற்றுலா மையமாக நமது நாடு மாறும் என்று மன்சுக் மாண்டவியா கூறினார்.

மும்பை,

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா மராட்டிய மாநிலம் அகமதுநகரில் சுகாதாரம் தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. ஆரோக்கியமான குடிமக்கள் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதால், அரசாங்கம் ஆரோக்கியத்தை வளர்ச்சியுடன் இணைத்துள்ளது.

மக்கள் நோய்வாய்ப்பட மாட்டார்கள் என்பதை வலியுறுத்தி, முதலில் தடுப்பு சிகிச்சையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தில் கவனம் செலுத்துகிறோம்.எந்தவொரு கொள்கையும் எதிர்காலத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்.

அரசு சுகாதார வசதிகளை உருவாக்குவது மட்டுமின்றி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது. சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், இந்தியா ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது.

நம் நாட்டின் இளைஞர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெறும் போது, உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ சுற்றுலா மையமாக நமது நாடு மாறும். 'எல்லோரும் நலம்' என்பதே உலகத்தைப் பற்றிய இந்தியாவின் கண்ணோட்டம் ஆக உள்ளது.

அரசின் ஆராய்ச்சிக் கொள்கையால், உலகில் உள்ள ஒவ்வொரு 10 விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களில் கிட்டத்தட்ட 3 பேர் இந்தியர்கள் ஆக திகழ்கின்றனர். தனியார் அல்லது பொது நிறுவனங்களில் புதுமையான ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள விரும்பும் திறமையான இளைஞர்களை ஊக்குவித்து ஆதரவளிப்பதே அரசின் ஆராய்ச்சிக் கொள்கையாகும். இந்தியா கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.


Next Story