மல்லிகார்ஜுன கூபா ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைந்தார்


மல்லிகார்ஜுன கூபா ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைந்தார்
x

பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. மல்லிகார்ஜுன கூபா ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைந்தார்

பெங்களூரு:-

கர்நாடக தோ்தல் நெருங்கி வருவதால் கட்சி தாவல் சூடுபிடித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஹாசன் மாவட்டம் அரகல்கோடு ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. ஏ.டி.ராமசாமி, மற்றொருவர் பா.ஜனதா கட்சியின் கூட்லகி தொகுதி எம்.எல்.ஏ. ஒய்.கோபாலகிருஷ்ணா. இவர்கள் 2 பேரும் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான மல்லிகார்ஜுன கூபா, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சேர்ந்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் பசவகல்யாண் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்திருந்தார். இந்த முறை பா.ஜனதாவில் அவருக்கு டிக்கெட் கிடைக்காது என தெரிகிறது. இதனால் அவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இதற்கு முன்பு இவர் பசவகல்யாண் தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 2 முறை போட்டியுள்ளார். 2 முறையும் அவர் வெற்றி பெற்றார். கடந்த முறை ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். எனவே இந்த முறை இழந்த செல்வாக்கை மீட்டு கொண்டு வர தன்னை ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இணைத்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறை பசவகல்யாண் தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) சார்பில் மல்லிகார்ஜுன கூபா போட்டியிடுவார் என தெரிகிறது.


Next Story