மராட்டிய மாநிலங்களவை தேர்தல்; பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவு: சஞ்சய் ராவத் அதிரடி குற்றச்சாட்டு


மராட்டிய மாநிலங்களவை தேர்தல்; பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவு:  சஞ்சய் ராவத் அதிரடி குற்றச்சாட்டு
x

மராட்டிய மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு உள்ளது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.



புனே,



கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மராட்டிய மாநில மாநிலங்களவை எம்.பி. தோ்தலில் சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், சஞ்சய் பவாரும், காங்கிரஸ் சார்பில் இம்ரான் பிரதாப் கார்கியும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் படேலும் போட்டியிட்டனர்.

இதேபோன்று பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி பியூஸ் கோயல், அனில்போன்டே, தனஞ்செய் மகாதிக் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். 6 பேரை தேர்வு செய்ய 7 பேர் களத்தில் இருந்தனர்.

இதில் சஞ்சய் ராவத், இம்ரான் பிரதாப்கார்கி, பிரபுல் படேல், ஆகியோரை வெற்றி பெற வைக்க ஆளும் கூட்டணிக்கும், பியூஷ் கோயல், அனில் போன்டேயை வெற்றி பெற செய்ய பா.ஜ.க.வுக்கும் போதுமான எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தது. ஆனால் 6வது எம்.பி.யை வெற்றி பெற வைக்க ஆளுங்கட்சிகள், பா.ஜனதா ஆகிய 2 தரப்பிற்கும் போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லை.

அவர்களுக்கு 6வது எம்.பி.யை வெற்றி பெற வைக்க சுயேச்சை, சிறிய கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே பா.ஜனதா ஒரு வேட்பாளரை திரும்ப பெற வேண்டும் என ஆளுங்கட்சிகள் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார்.

இதன் காரணமாக மராட்டிய சட்டசபையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வாக்குப்பதிவு உறுதியானது. இந்த 6வது இடத்தில் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் பவார், பா.ஜ.க.வை சேர்ந்த தனஞ்செய் மகாதிக் ஆகியோர் மோதினர்.

இதனால் ஆளுங்கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வினர் சிறிய கட்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற யூகங்கள் வகுத்ததால் கடந்த சில நாட்களாக மராட்டிய அரசியலில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) ஆகிய கட்சிகள் தலா மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி பியூஸ் கோயல், அனில்போன்டே, தனஞ்செய் மகாதிக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இம்ரான் பிரதாப் கார்கியும், சிவசேனா சார்பில் போட்டியிட்ட சஞ்சய் ராவத்தும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரபுல் படேலும் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி காங்கிரசை சேர்ந்த பிரதாப் கார்கி கூறும்போது, சிவசேனாவின் சஞ்சய் ராவத், நான் மற்றும் தேசியவாத காங்கிரசின் பிரபுல் பட்டேல் வெற்றி பெற்றுள்ளோம். எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஆனால், மகா விகாஸ் அகாடியின் 4வது வேட்பாளரான சஞ்சய் பவார் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்பதில் வருத்தம் அடைகிறோம் என கூறியுள்ளார்.

தேர்தலின்போது, மராட்டியம் மற்றும் அரியானாவில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களை அளித்தன. இதனால், சிறிது நேரம் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இன்று கூறும்போது, சிவசேனா எம்.எல்.ஏ. சுகாஸ் கந்தேவின் வாக்கு பதிவு நிராகரிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அது செயல்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

எங்களுடைய ஒரு வாக்கை அவர்கள் (தேர்தல் ஆணையம்) செல்லாத வாக்காக்கி உள்ளனர். நாங்கள் இரண்டு வாக்குகளுக்கு எதிராக புகார் கூறினோம். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

ஆளும் மகா விகாஸ் அகாடியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் விதிகளை மீறி விட்டனர் என பா.ஜ.க. நேற்று குற்றச்சாட்டாக கூறியிருந்தது. அவர்களது வாக்குகளை நிராகரிக்கும்படி தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சி வலியுறுத்தி இருந்தது.

தேசியவாத காங்கிரசின் ஜிதேந்திரா ஆவாத், காங்கிரசின் யசோமதி தாக்குர் மற்றும் சிவசேனாவின் சுகாஸ் கந்தே ஆகிய மூவரின் ஓட்டுகளை நிராகரிக்கும்படி பா.ஜ.க. அளித்த புகாரில் தெரிவித்து இருந்தது.


Next Story