முஸ்லிம் வாலிபர் கொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு


முஸ்லிம் வாலிபர் கொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
x

முஸ்லிம் வாலிபர் கொலை வழக்கில் மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

மங்களூரு;

வாலிபர் படுகொலை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் மங்கல்பேட்டையை சேர்ந்தவர் முகமது பாசில் (வயது 23). இவர் கடந்த 28-ந்தேதி சூரத்கல் பகுதியில் உள்ள துணிக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்மநபர்கள், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் முகமது பாசிலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டதுடன், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் வருகிற 6-ந்தேதி வரை இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

22 பேரிடம் விசாரணை

இந்த நிலையில் முகமது பாசில் கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் பலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முகமது பாசில் கொலை வழக்கு தொடர்பாக சூரத்கல், பஜ்பே, பனம்பூர், முல்கி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 22 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

கொலையாளிகளை பிடிக்க ஹாசன் போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த அன்று இரவு சூரத்கல் பகுதியில் பதிவான செல்போன் அழைப்புகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

முகமது பாசிலின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி வீடியோக்களை சேகரித்து அதன்மூலம் மர்மநபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story