மைசூரு-தாளகுப்பா பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்; வருகிற 25-ந்தேதி முதல் ஓடுகிறது


மைசூரு-தாளகுப்பா பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்; வருகிற 25-ந்தேதி முதல் ஓடுகிறது
x

கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட மைசூரு-தாளகுப்பா பயணிகள் ரெயில், வருகிற 25-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சிவமொக்கா;

மைசூரு-தாளகுப்பா ரெயில்

கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு காரணமாக ரெயில், பஸ், விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து படிப்படியாக தொடங்கப்பட்டது.

அதன்படி கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மைசூரு-தாளகுப்பா ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் அந்த ரெயிலை போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் ரெயிலை மீண்டும் இயக்கும்படி கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற தென்மேற்கு ரெயில்வே, மைசூரு-தாளகுப்பா ரெயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வருகிற 25-ந்தேதி முதல் இயக்கம்

மைசூருவில் இருந்து தாளகுப்பாவிற்கு(ரெயில் எண்:-16222) இயக்கப்படும் பயணிகள் ரெயில் வருகிற 25-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. அன்றைய தினம் மைசூருவில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில் ஹாசன், அரிசிகெரே, பேளூரு, பத்ராவதி, சிவமொக்கா, ஆனந்த்புரா, சாகர் வழியாக சென்று இரவு 11.30 மணிக்கு தாளகுப்பா ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

அதேபோல் மறுமார்க்கமாக 26-ந் தேதி அதிகாலை 6.10 மணிக்கு தாளகுப்பாவில் இருந்து புறப்படும் ரெயில், மைசூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு மதியம் 3.35 மணிக்கு வந்தடைகிறது. இந்த பயணிகள் ரெயிலில் மொத்தம் 12 ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் ஆகும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story