'போனாவை கத்தி என நினைத்து' மனைவி கண்முன்னே கணவனை சுட்டுக்கொன்ற போலீசார் - அதிர்ச்சி சம்பவம்

என் கணவரை சுட்டுவிட வேண்டாம் என அந்த பெண் கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் பகுதியில் உள்ள சாலையில் ஒரு பெண்ணை நபர் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு குடும்ப வன்முறை தாக்குதல் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து இரு கார்களில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது காரின் அருகே பெண் மற்றும் அவரது மகன் அமர்ந்திருந்தனர். காரில் இருந்து அந்த பெண்ணின் கணவரான பிரண்டன் கொனி (வயது 36) என்ற நபர் ஆக்ரோஷமாக கீழே இறங்கினார். அப்போது தன் கணவரை சுட்டுவிட வேண்டாமென அந்த பெண் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடனடியாக, சரணடையும்படி பிரண்டன் கொனிடம் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், சரணடையாலம் பிரண்டன் போலீசார் நோக்கி வேகமாக நடந்து சென்றுள்ளார். மேலும், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பொருளை எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் அவர் கத்தி வைத்துள்ளார் என கருதி பிரண்டன் மீது இருமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பிரண்டன் மனைவி கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். ஆனால், பிரண்டன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்தது பேனா என்பது தெரியவந்தது. பேனாவை கத்தி என நினைத்து பிரண்டன் மீது போலீஸ் அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பிரண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். கடந்த 5 ம் தேதி நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது சோகமான சம்பவம் என குறிப்பிட்டுள்ள போலீஸ் உயர் அதிகாரி அதேவேளை தற்காப்பு நடவடிக்கைக்காகவே சக போலீஸ் அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளார்.