துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.37 லட்சம் தங்கம் சிக்கியது


துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.37 லட்சம் தங்கம் சிக்கியது
x

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக உடுப்பியை சேர்ந்த பயணியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக உடுப்பியை சேர்ந்த பயணியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

சர்வதேச விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார், சுங்க வரித்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் போன்றோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள், போதைப்பொருட்கள் விமானம் மூலம் கடத்தி வரப்படுவதும், அவற்றை அதிகாரிகள் சோதனை நடத்தி பிடித்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது.

நூதன முறையில்...

அதன்படி நேற்று முன்தினம் துபாயில் இருந்து மங்களூரு விமான நிலையத்திற்கு ஒரு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்க வரித்துறையினர் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பைந்தூரைச் சேர்ந்தவர் என்பதும், தங்கத்தை துகள்களாக்கி அதை பற்பசையுடன் சேர்த்து கலந்து நூதன முறையில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த பயணியை சுங்க வரித்துறையினர் பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர் கடத்தி வந்த ரூ.37 லட்சத்து 18 ஆயிரத்து 800 மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பரபரப்பு

அதையடுத்து அந்த பயணி மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story