கேரளாவில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமறைவாக இருந்த ஆசிரியர் நாகர்கோவிலில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 16-ம் தேதி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலைநிகழ்ச்சிகளை கண்டுகழித்துவிட்டு அதேபள்ளியை சேர்ந்த 15 வயதான பிளஸ் 1 மாணவி வீடு திரும்பியுள்ளார்.
அந்த சமயத்தில் பஸ் வசதி இல்லாததால் பைக்கில் வீட்டில் கொண்டு விடுவதாக அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் கிரண் கருணாகரன் (வயது 43) கூறியுள்ளார்.
இதை நம்பிய மாணவி ஆசிரியரின் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால், வீட்டிற்கு செல்லும் வழியில் மாணவிக்கு ஆசிரியர் கிரண் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பள்ளியில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதை யாரிடமும் கூறவேண்டாம் என பள்ளியில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அதேவேளை, தனக்கு நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது வகுப்பு தோழிகளிடம் கூறியுள்ளார். இதை கேட்ட சக மாணவிகள் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கூறியதுடன் போலீசிலும் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பதுங்கி இருந்த ஆசியர் கிரண் கருணாகரனை கேரள போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், பெற்றோர் அளித்த புகாரை ஏற்க மறுத்து அவர்களுக்கு அழுத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர், 2 ஆசிரியைகளையும் போலீசார் கைது செய்தனர்.