மணிப்பூரில் பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை கலவர வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு குழு நியமனம்


மணிப்பூரில் பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை கலவர வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு குழு நியமனம்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:00 AM GMT (Updated: 10 Jun 2023 12:00 AM GMT)

மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இனத்தினருக்கும் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. சுமார் 100 பேர் பலியானார்கள்.

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இனத்தினருக்கும் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. சுமார் 100 பேர் பலியானார்கள்.

சில நாட்கள் ஓய்ந்திருந்த கலவரம், 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் தலைதூக்கியது.

இந்நிலையில், நேற்று கங்க்போக்பி மாவட்டம் சங்கைதெல் அருகே வன்முறை சம்பவம் நடந்தது. பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தகவல் அறிந்து, ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் அங்கு விரைந்தனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 6 வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற மணிப்பூர் மாநில அரசு சமீபத்தில் சிபாரிசு செய்தது.

மணிப்பூருக்கு சென்றிருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று அறிவித்தார். அவற்றில், 5 வழக்குகள் குற்றச்சதி தொடர்பானவை. ஒரு வழக்கு, பொதுவான சதி தொடர்பானது.

இந்நிலையில், மேற்கண்ட 6 வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை சி.பி.ஐ. அமைத்துள்ளது. டி.ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி தலைமையிலான அக்குழு, விசாரணை பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சகம், மணிப்பூருக்கு ரூ.101 கோடியே 75 லட்சம் நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.


Next Story