நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை..!


நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை..!
x

நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தடை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

புதுடெல்லி,

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் விரிவான செயல் திட்டத்தை அறிவித்தது. அதன்படி ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருளின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் ஜூலை 1-ந் தேதி முதல் தடை செய்யப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டாம் என தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் புதிய வணிக உரிமங்களை வழங்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டால் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும். தடையை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தியாவில் 2019-20-ம் ஆண்டில் 34 லட்சம் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகியுள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் அபாயகரமான புகை மற்றும் வாயுக்களை வெளியிடுவதால் இவற்றை எரிக்க முடியாது. எனவே, மறுசுழற்சி தவிர பிளாஸ்டிக் பொருட்களை சேமிப்பது மட்டுமே சாத்தியமான தீர்வாக உள்ளது. இந்த தடை பிளாஸ்டிக் கழிவை குறைக்க பெரிதும் உதவும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சோதனைச்சாவடிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்கள்:-

* பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி

* பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி

* பிளாஸ்டிக் குச்சி

* பிளாஸ்டிக் கொடி

* மிட்டாயில் இருக்கும் பிளாஸ்டிக் குச்சி

* ஐஸ்கிரீம் குச்சி

* அலங்கார வேலைகளுக்கான தெர்மகோல்

* சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி

* சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள்

* பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள்


Next Story