தூக்குப்போட முயன்ற மனைவியை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவன்... கடைசியில் நடந்த விபரீதம்


தூக்குப்போட முயன்ற மனைவியை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவன்... கடைசியில் நடந்த விபரீதம்
x
தினத்தந்தி 26 Oct 2022 11:17 AM GMT (Updated: 26 Oct 2022 11:19 AM GMT)

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தூக்குப்போட முயன்ற மனைவியை தடுக்காமல், அதை கணவன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கான்பூர்:

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர், கித்வாய் நகரில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர் குப்தா. இவர் தனது மகள் ஷோபிதா குப்தாவை குல்மோஹரில் வசிக்கும் சஞ்சீவ் குப்தா என்ற நபருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவன் மனைவி இடையே பல நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் சோபிதா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சஞ்சீவ் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த பெண்ணின் பெற்றோர் தனது மகள் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தனது மருமகனிடம் தனது மகள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள் என கேட்டுள்ளார். அப்போது சஞ்சீவ் குப்தா தனது மொபைலில் ஷோபிதா தூக்கிடும் வீடியோ ஒன்றை காண்பித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ஷோபிதாவின் தந்தை ராஜ் கிஷோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, ​​ஷோபிதாவின் கணவர் சஞ்சீவை போலீசார் கைது செய்தனர். தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.



Next Story