மராட்டிய அமைப்பினரை, தடுத்து நிறுத்திய போலீசார்


மராட்டிய அமைப்பினரை, தடுத்து நிறுத்திய போலீசார்
x

போராட்டம் நடத்த பெலகாவிக்கு வந்த மராட்டிய அமைப்பினரை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரிகள்.

பெலகாவி:

கர்நாடக-மராட்டிய எல்லையில் பெலகாவி மாவட்டம் உள்ளது. இங்கு மராட்டியர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இதனால் பெலகாவியை மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இதற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆண்டுதோறும் பெலகாவியில் கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மராட்டியர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில் பெலகாவியில் நேற்று கன்னட ராஜ்யோத்சவா விழா வழக்கம் போல கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவிக்கு போராட்டம் நடத்த வரும்படி மராட்டிய அமைப்புகளுக்கு, பெலகாவியில் வசித்து வரும் மராட்டியர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர். அதன்படி கோலாப்பூரில் இருந்து மராட்டிய அமைப்புகள் போராட்டம் நடத்த பெலகாவிக்கு வாகனங்களில் வந்தனர். அவர்களை எல்லையில் தடுத்து நிறுத்திய கர்நாடக போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பெலகாவியில் நடக்க இருந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது. இருப்பினும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெலகாவியில் 3 துணை போலீஸ் கமிஷனர்கள், 12 உதவி போலீஸ் கமிஷனர்கள், 52 இன்ஸ்பெக்டர்கள், 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.


Next Story