வாலிபர் குத்திக் கொலை


வாலிபர் குத்திக் கொலை
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

சித்ரதுர்காவில் வாலிபரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிக்கமகளூரு:

கொலை

சித்ரதுர்கா டவுன் காமதேனு படாவனே அருகே உள்ள அலகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாருதி (வயது25). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அலகேரி பகுதியில் நின்று மாருதி உள்ளிட்ட சிலர் கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில் கஞ்சா போதையில் இருந்தவர்கள், கத்தியால் மாருதியை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த மாருதி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்த தப்பி சென்றுவிட்டனர்.

போலீஸ் வலைவீச்சு

இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மாருதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா புகைக்கும்போது ஏற்பட்ட தகராறில் மாருதியை மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. மாருதியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story