மத்திய அரசு துறைகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு


மத்திய அரசு துறைகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

மத்திய அரசு துறைகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த மாதம் 'ரோஜ்கார் மேளா' என்ற வேலைவாய்ப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கடந்த 8 ஆண்டுகளாக வேலைவாய்ப்பை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார்.

முதல்கட்டமாக, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.

இருப்பினும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். மத்திய செயலகத்தில் 1,600 பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியான பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தார். அப்படியானால், 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பல்வேறு அரசுத்துறைகளில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், பிரதமர் மோடி வெறும் 75 ஆயிரம் நியமன கடிதங்களை மட்டுமே வழங்கி இருக்கிறார்.

பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய செயலகத்தில் 1,600 காலி பணியிடங்கள் உள்ளன. என்ன காரணம்? என்று அவர் கூறியுள்ளார்.


Next Story