எதிர்க்கட்சிகளின் அடுத்த ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்போம்; மம்தா பானர்ஜி உறுதி


எதிர்க்கட்சிகளின் அடுத்த ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்போம்; மம்தா பானர்ஜி உறுதி
x

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்போம் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று உறுதிப்படுத்தி உள்ளார்.

கொல்கத்தா,

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

இதில், கலந்து கொள்ள 24 கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதில், கட்சிகளுக்கு இடையே விரிவான ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான விசயங்களில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

கூட்டத்தில் ம.தி.மு.க., கொ.தே.ம.க., வி.சி.க., புரட்சிகர சமூகவாத கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய எட்டு புதிய கட்சிகள் கலந்து கொள்ள கூடும் என கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்து உள்ளார். இதற்கு முன்பு ஜூலை 13 இந்த கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.

எனினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் பிரிந்து சென்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தது கட்சியில் குழப்பம் ஏற்படுத்தியது. இதனால், இந்த கூட்டம் 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்போம் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தேசிய பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி இன்று உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதற்கேற்ப, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மேலவையின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அடுத்த ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும்படி, முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

அவர் பாட்னாவில் நடந்த கூட்டம் பற்றி குறிப்பிட்டு, நமது ஜனநாயக அரசியல் அமைப்பை அச்சுறுத்த கூடிய பல்வேறு முக்கிய விவகாரங்களை பற்றி நாம் ஆலோசனை செய்ய முடிந்தது. இந்த கூட்டம் ஒரு பெரிய வெற்றி பெற்றது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், ஒன்றுபட்டு போராடுவதற்கான ஒருமித்த ஒப்பந்தமும் ஏற்பட்டது என அவர் அந்த வரவேற்பு கடிதத்தில் குறிப்பிட்டார்.

இதன்படி, பெங்களூரு நகரில் வருகிற 17-ந்தேதி கூட்டத்திற்கு பின்னர் இரவு விருந்து மாலை 6 மணியளவில் நடைபெறும். அடுத்த நாள் 18-ந்தேதி காலை 11 மணியளவில் மீண்டும் கூட்டம் தொடரும். பெங்களூருவில் உங்களை சந்திப்பதற்காக எதிர்பார்த்து இருக்கிறேன் என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.


Next Story