திரைப்பட பாணியில் வேட்டியால் முகத்தை மூடி பெண்களுக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது


திரைப்பட பாணியில் வேட்டியால் முகத்தை மூடி பெண்களுக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது
x

கேரளாவில் திரைப்பட பாணியில் வேட்டியை அவிழ்த்து பெண்ணின் முகத்தை மூடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் திரைப்பட பாணியில் வேட்டியை அவிழ்த்து பெண்ணின் முகத்தை மூடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கேரளாவில் கடந்த 1995-ம் ஆண்டு மோகன்லால் நடித்த `ஸ்படிகம்' படம் வெளியானது. இந்தப்படத்தில் மோகன்லால் தன் எதிரிகளைப் பின் தொடர்ந்து சென்று திடீரென தன் வேட்டியை அவிழ்த்து அவர்களின் முகத்தில் போட்டு மூடி விட்டு அவர்களைத் தாக்குவார். இதனால் எதிராளிகளுக்குத் தன்னைத் தாக்கியது யார் என்றே தெரியாது.

இதே பாணியை பயன்படுத்தி ஒரு ஆசாமி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரது பெயர் விஷ்ணு (வயது 34). அவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

வேலைக்குச் சென்று விட்டு மாலையில் தனிமையில் வீடு திரும்பும் பெண்களைக் குறி வைத்து விஷ்ணு பாலியல் சீண்டலை அரங்கேற்றியுள்ளார். அந்தப் பெண்களின் பின்னாலேயே சென்று, திடீரென தன் வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடி விட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவார். அதேநேரம் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண் இமைக்கும் நொடியில் மறைந்தும் விடுவார்.

இதனாலேயே இவரது நண்பர்கள் வட்டத்தில் `ஸ்படிகம்' விஷ்ணு என்று அழைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்காடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர். இதே போல அவர் வேறு பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story