சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறைகடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறைகடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:45 PM GMT)

சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடலூர்

கடலூர் முதுநகர் சோனாங்குப்பத்தை சேர்ந்தவர் சூரியகந்தன் மகன் பெருமாள் (வயது 31). திருமணமானவர். இவர் சுனாமியில் தாய், தந்தையை பறிகொடுத்து, பாட்டி வீட்டில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் நெருங்கி பழகி வந்தார்.

இந்நிலையில் கடந்த 27.12.2020 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமி வீட்டுக்குள் புகுந்த பெருமாள், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து 3 மாதங்கள் கழித்து உடல் சோர்வாக இருந்த சிறுமியை அவரது பாட்டி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

10 ஆண்டு சிறை

இது பற்றி சிறுமி கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அந்த சிறுமிக்கு கடந்த 28.9.2021 அன்று ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான சான்றிதழும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு, இவ்வழக்கு தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் பெருமாள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ரூ.6 லட்சம் இழப்பீடு

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அவரின் எதிர்கால நலன் கருதி, மாவட்ட சமூக பாதுகாப்பு துறை மூலம் நலவாழ்வு நிதியில் இருந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.


Next Story