சமூக அறிவியல் பாடத்தேர்வை 29 ஆயிரத்து 935 பேர் எழுதினர்


சமூக அறிவியல் பாடத்தேர்வை 29 ஆயிரத்து 935 பேர் எழுதினர்
x
திருப்பூர்

திருப்பூர்,:

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி தேர்வான சமூக அறிவியல் பாடத்தேர்வை 29 ஆயிரத்து 935 பேர் எழுதினார்கள். மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

29,935 பேர் தேர்வு எழுதினர்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நேற்று கடைசி தேர்வான சமூக அறிவியல் பாடத்தேர்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 969 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 29 ஆயிரத்து 935 பேர் எழுதினார்கள். 2 ஆயிரத்து 34 பேர் தேர்வு எழுதவரவில்லை.

தேர்வு குறித்து மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மாணவர் அபினவ்:-

1, 2 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. 8 மதிப்பெண் வினாவில் வரைபடம் சிரமமாக இருந்தது. 5 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும். அனைவரும் எளிதில் தேர்ச்சி பெறலாம்.

மாணவர் ஹரீஸ்:-

1 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. பாடத்தின் பின்புறம் உள்ள வினாக்கள் அப்படியே வந்தது. 5 மதிப்பெண் வினாக்கள் சிறிது கடினமாக இருந்தது. 8 மதிப்பெண் வினாக்கள் சிரமமாக இருந்தது. 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.

முக்கிய வினாக்கள் வந்தன

மாணவி சத்யபிரியா:-

1 மதிப்பெண் வினாக்கள் எளிது. 8 மதிப்பெண் வினாவில் 1 வினா கடினமாக இருந்தது. வரைபடம் எளிது. 5 மதிப்பெண் வினாக்கள் எளிதாகவே இருந்தது. திருப்புதல் தேர்வு வினாக்கள் வந்திருந்தது. ஆசிரியர்கள் தெரிவித்த முக்கிய வினாக்கள் வந்தது. 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.

மாணவி லலிதா:-

வினாக்கள் எளிதாகவே இருந்தது. பாடத்தின் பின்புறம் உள்ள வினாக்களே வந்ததால் எளிதில் தேர்ச்சி பெறலாம். 3-வது திருப்புதல் தேர்வு வினாக்கள் அதிகம் வந்திருந்தன. ஆசிரியர் தெரிவித்த முக்கிய வினாக்களை படித்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

தேர்வு எளிது

மாணவி கன்னிகாஸ்ரீ:-

வரைபடம் எளிது. 5 மதிப்பெண் வினாக்களில் இருந்தே 8 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டது. அனைத்து வினாக்களும் பாடத்தின் பின்புறம் உள்ள வினாக்கள் தான். எளிதாக இருந்தது. 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.

மாணவி ரக்ஸனி:-

1 மதிப்பெண் வினாக்கள் எளிது. ஆசிரியர் தெரிவித்த முக்கிய வினாக்கள் வந்திருந்தது. திருப்புதல் தேர்வு வினாக்களும் கேட்கப்பட்டன. 80 மதிப்பெண்களுக்கு மேல் எளிதில் பெற முடியும். அனைவரும் தேர்ச்சி பெறலாம். எங்களுக்கு கணித தேர்வை தவிர மற்ற அனைத்தும் எளிதாகவே அமைந்தது.

கொண்டாட்டம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்றுடன் முடிந்தது. கடைசி பாடத்தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் உற்சாகம் மிகுதியால் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்கள். மை தெளித்தும், வண்ண பொடிகளை முகத்தில் பூசியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மாணவிகள் தோழிகளுடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story