தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபடுகிறார்கள்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபடுகிறார்கள்
x

சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தெரிவித்தார்.

சேலம்

போலீஸ் அதிகாரிகள் ஆய்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பொதுமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் உதவி கமிஷனர்கள் நாகராஜன், உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை சேலம் 4 ரோடு பகுதியில் திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது சிறிது தூரம் துணை கமிஷனர் மாடசாமி நடந்து சென்று சாலையோரம் உள்ள கடைகள் முன்பு மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனை முன்னேற்பாடுகள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

10 இடங்களில் கண்காணிப்பு

சேலம் மாநகரில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதற்கு வந்த பொதுமக்களுக்கு எவ்வித சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி இந்தாண்டு முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடைவீதி, 4 ரோடு, 5 ரோடு உள்பட 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீபாவளிக்கு புத்தாடை எடுக்க வரும் கூட்டத்தில் புகுந்து விடும் திருடர்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் 37 போலீசார் தங்களது உடையில் சிறிய கேமராவை பொருத்தி அதன்மூலம் திருடர்களை கண்காணிப்பார்கள். தீபாவளி பாதுகாப்பு பணியில் 1,200 போலீசாரும், ஊர்க்காவல் படையினர் 150 பேரும் என மொத்தம் 1,350 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுடன் அந்தந்த பகுதி உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். எனவே தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி, நகை மற்றும் இதர பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து 5 ரோடு, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


Next Story