ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் 6 பேர் கைது


ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்  6 பேர் கைது
x

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திமிங்கல உமிழ்நீர் கட்டிகள்

அரியவகை உயிரினமான ஸ்பேம் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகளில் (ஆம்பர் கிரீஸ்) இருந்து உயர்ரக வாசனை திரவியங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதனை மூலப்பொருளாக பயன்படுத்தி மருத்துவத்துறையில் பல்வேறு மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது. இதனால் திமிங்கலத்தின் உமிழ்நீருக்கு சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உள்ளது.

இதனால் தமிழகத்தில் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே சில மாவட்டங்களில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

ரெயிலில் கடத்த முயற்சி

இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் ரெயில் மூலம் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி கடத்தப்பட இருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட வனஅதிகாரி இளையராஜா தலைமையில் வன ஊழியர்கள் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர். பின்னர் ரெயில்வே போலீசாரின் உதவியுடன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை நடத்தினர்.

பறிமுதல்

அப்போது ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டி ஒன்றில் வாலிபர் ஒருவரின் நடத்தையில் வனத்துறையினர், ரெயில்வே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அந்த வாலிபரின் பையை சோதனை செய்த போது, அந்த பையில் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 2 கிலோ ஆகும். இதனை தொடர்ந்து திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாலிபரை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனஅலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

6 பேர் கைது

விசாரணையில், அவர் அழகியபாண்டியபுரம் தோமையார்புரத்தை சேர்ந்த தினகரன் லாசர் (வயது 35) என்பதும், திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை ரெயிலில் கடத்தி சென்று மும்பையில் விற்க திட்டமிட்டதும், இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பதும் அம்பலமானது.

அதன்படி இந்த கடத்தலில் தொடர்புடைய நாகர்கோவில் பெருவிளை விநாயகர் தெருவை சேர்ந்த அருள் (27), கீழ பெருவிளை மகேஷ் (42), பார்வதிபுரம் திலீப் குமார் (36), ஆசாரிபள்ளம் சதீஷ் (35), தம்மத்துகோணம் சுபா தங்கராஜ் (49) ஆகிய 5 பேரையும் வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

கைதான 6 பேரும் திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் கடத்தலில் ஈடுபட்டது எப்படி? இவர்களுக்கு திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் கிடைத்தது எப்படி? மும்பையில் யாரிடம் விற்க சென்றார்கள்? என்பது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீர் கட்டிகளின் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

---


Next Story