விழுப்புரம் அருகே காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி மற்றொருவர் படுகாயம்


விழுப்புரம் அருகே    காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி    மற்றொருவர் படுகாயம்
x

விழுப்புரம் அருகே காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியாகினர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

விழுப்புரம்

காட்டுப்பன்றி மீது மோதல்

கடலூர் மாவட்டம் கரும்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டு ராஜா (வயது 55), எனதிரிமங்கலத்தை சேர்ந்த ராமமூர்த்தி (45), சின்னகுச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவரசன் (34) ஆகிய 3 பேரும் நேற்று அதிகாலை புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள பகண்டை என்ற கிராமத்திற்கு கரும்பு வெட்டும் பணிக்காக ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த வளவனூரில் உள்ள ஆயில் மில் பஸ் நிறுத்தம் அருகே அதிகாலை 5.50 மணியளவில் சென்றபோது திடீரென காட்டுப்பன்றி ஒன்று சாலையின் குறுக்கே அங்கும், இங்குமாக ஓடிக்கொண்டிருந்தது. இதில் அந்த காட்டுப்பன்றியின் மீது எதிர்பாராதவிதமாக அவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்களில் பட்டுராஜாவும், ராமமூர்த்தியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இளவரசன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்த காட்டுப்பன்றியும் செத்தது.

இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும் மற்றும் வளவனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், விபத்தில் படுகாயமடைந்த இளவரசனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story