மின் இணைப்புடன் ஆதார் இணைக்க 2 மாத காலஅவகாசம் வழங்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் கோரிக்கை


மின் இணைப்புடன் ஆதார் இணைக்க 2 மாத காலஅவகாசம் வழங்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
x

‘மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2 மாத காலஅவகாசம் வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்-லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சார கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் மின் சந்தாதாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மின்வாரிய சீர்திருத்தத்துக்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து மக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதிய அவகாசம் கொடுக்காமல் திணிக்கக்கூடாது.

ஆதார் இணைப்புக்கான ஆன்-லைன் வழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்புதான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதற்குள்ளாகவே ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது நியாயமல்ல.

2 மாதம் அவகாசம் வேண்டும்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எதற்காக இணைக்க வேண்டும்? என்பதே பெரும்பான்மையானோருக்கு தெரியவில்லை. அதுகுறித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்.

ஆதார் எண்ணை இணைப்பதற்கு குறைந்தது 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும். அதற்குள்ளாக மின் பயன்பாடு குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்ய செல்லும்போது, பயனாளிகளின் ஆதார் அட்டையை பெற்று அங்கேயே இணைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story