விழுப்புரம் அருகேதடுப்பணையில் மூழ்கி 2 மாணவர்கள் பலிகுளிக்க சென்ற போது பரிதாபம்


தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே பம்பை ஆற்று தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

விழுப்புரம்


விழுப்புரம் பானாம்பட்டு ராகவேந்திரா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் உதயா (வயது 13), விழுப்புரம் மணிமேகலை தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் பாலசுப்பிரமணி (14). இவர்களில் உதயா விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பாலசுப்பிரமணி பீமநாயக்கன்தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில் நேற்று முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் மாணவர்கள் உதயா, பாலசுப்பிரமணி ஆகிய இருவரும் தங்கள் நண்பர்கள் 4 பேருடன் விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டில் உள்ள பம்பை ஆற்றுக்கு குளிக்கச்சென்றனர். அங்குள்ள தடுப்பணையில் அவர்கள் 6 பேரும் இறங்கி குளித்துள்ளனர்.

நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

இந்த சூழலில் 6 மாணவர்களில் 3 பேர் மட்டும் மதியம் 2 மணியளவில் தடுப்பணையில் இருந்து வெளியே வந்தனர். மற்ற 3 பேரும் குளித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென அவர்கள் 3 பேரும் சேற்றில் சிக்கிக்கொண்டனர்.

இதைப்பார்த்த சக நண்பர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.... என்று அபயக்குரல் எழுப்பினர். உடனே அருகில் இருந்த சில இளைஞர்கள் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் மீட்க முயன்றனர். அவர்களில் விழுப்புரம் மணிமேகலை தெருவை சேர்ந்த ராம்குமார் மகன் சங்கர் (13) என்பவரை மட்டும் மீட்டனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சங்கருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே ஆற்றில் மூழ்கிய உதயா, பாலசுப்பிரமணி ஆகிய இருவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்கள் இருவரையும் வெகுநேரம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பிணமாக மீட்பு

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தடுப்பணையில் இறங்கி மாயமான 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு முதலில் பாலசுப்பிரமணியின் உடலையும், அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து உதயாவின் உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களின் இருவரின் உடலையும் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்த காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது. பின்னர் இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.


Next Story