மிரட்டும் வகையில் ஒருமையில் பேசிய 2 வாலிபர்கள் கைது


அமைச்சர் ஆர்.காந்தியிடம் செல்போனில் மிரட்டும் வகையில் ஒருமையில் பேசிய 2 வாலிபர்கள் கைது செய்ய்ப்பட்டனர்.

ராணிப்பேட்டை

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை சென்று விட்டு காரில் ராணிப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர், தான் வக்கீல் என்றும், தன்னிடம் ராணிப்பேட்டையை சேர்ந்த ஒருவர் பணம் வாங்கியுள்ளார். அதை நீங்கள் தான் உடனடியாக வாங்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் போனில் தொடர்பு கொண்ட அந்த நபர், அமைச்சரை தொந்தரவு செய்யும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சரின் உதவியாளர் ராஜசேகரன் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி செல்போன் சிக்னலை வைத்து 2 வாலிபர்களை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மகன் கோகுல் (வயது 25), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த சுதாகர் மகன் பாலாஜி (31) என்பதும், அமைச்சரிடம் செல்போனில் பேசியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் மஸ்தான் வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தார்.


Next Story