பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x

எடப்பாடியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எடப்பாடி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்

எடப்பாடி:

பெண்ணிடம் நகை பறிப்பு

எடப்பாடியை அடுத்த மஞ்சக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராதா (வயது 40). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது வீட்டில் இருந்து எடப்பாடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சங்ககிரி -எடப்பாடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.

வீரப்பம்பாளையம் பால் வினியோக மையம் அருகே சென்ற போது, அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் தங்க நகையை பறித்துச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 ஆண்டு சிறை

இதைத்தொடர்ந்து ராதாவிடம் நகையை பறித்த கொங்கணாபுரம் மொரம்புக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (19) மற்றும் அவரது நண்பரான நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த கோபி (27) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை கைப்பற்றினர்.

இது குறித்த வழக்கு எடப்பாடியில் உள்ள குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாபு, குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ், கோபி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story