விவசாயிகள் தற்கொலை: சோழ மண்டலம் தற்கொலை மண்டலமாக மாறி வருகிறது சு.திருநாவுக்கரசர் அறிக்கை


விவசாயிகள் தற்கொலை: சோழ மண்டலம் தற்கொலை மண்டலமாக மாறி வருகிறது சு.திருநாவுக்கரசர் அறிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2016 7:00 PM GMT (Updated: 31 Dec 2016 5:41 PM GMT)

கடந்த 3 ஆண்டுகளாக காவிரியில் நீர் வராததால் குறுவை சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலையில் மன உளைச்சலால் கடந்த 2 மாதங்களில் 45 விவசாயிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சோழ மண்டலம் சோறுடைத்தது என்ற பெருமையை இழந்து இன்றைக்கு சோழ மண்டலம் தற்கொலை மண்டலமாக மாறி வருகிறது.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடந்த 3 ஆண்டுகளாக காவிரியில் நீர் வராததால் குறுவை சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலையில் மன உளைச்சலால் கடந்த 2 மாதங்களில் 45 விவசாயிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சோழ மண்டலம் சோறுடைத்தது என்ற பெருமையை இழந்து இன்றைக்கு சோழ மண்டலம் தற்கொலை மண்டலமாக மாறி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை தற்கொலை செய்துகொண்ட 50–க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி தமிழக அரசு அளிக்க வேண்டும். சாகுபடி செய்த பயிர் கருகியதனால் ஏற்பட்ட இழப்புக்கு ஈடுகட்ட ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம், விவசாயத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலமாக தொடர்ந்து வேலை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டதாக கூறப்படுகிற 122 படகுகளையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அப்படி இல்லையென்றால், இதற்குரிய இழப்பீட்டு தொகையை மத்திய–மாநில அரசுகள் இணைந்து தமிழக மீனவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Next Story