ம.தி.மு.க. பொதுக்குழு பிப்ரவரி 26–ந்தேதி நடக்கிறது வைகோ பேட்டி


ம.தி.மு.க. பொதுக்குழு பிப்ரவரி 26–ந்தேதி நடக்கிறது வைகோ பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2017 10:00 PM GMT (Updated: 1 Jan 2017 6:47 PM GMT)

ம.தி.மு.க. பொதுக்குழு பிப்ரவரி 26–ந்தேதி நடக்க இருப்பதாக வைகோ கூறினார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுக்குழு பிப்ரவரி 26–ந்தேதி நடக்க இருப்பதாக வைகோ கூறினார்.

ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:–

பொதுக்குழு கூட்டம்

ம.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வருகிற பிப்ரவரி 26–ந் தேதி நடக்கிறது. மக்கள் நலக்கூட்டணியில் இருந்து நாங்கள் விலகியதற்கான காரணத்தை ஏற்கனவே விளக்கமாக கூறி விட்டேன். அது பற்றி இனி எதுவும் சொல்வதற்கு இல்லை. எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் கொள்கையை விட்டுக்கொடுத்ததில்லை. தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. எனவே கூட்டணி குறித்த அந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்போம். ம.தி.மு.க மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடும்.

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துகள் வேதனை அளிக்கிறது. அப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்து இருக்க கூடாது. மறைந்த தலைவரின் உடலை தோண்டி எடுக்க உத்தரவிடுவேன் என்று அவர் எப்படி கூறலாம். நீதிபதிகள் பலருக்கும் அவரது கருத்து வேதனை தந்து இருக்கிறது. இதை சில நீதிபதிகள் என்னிடமே தெரிவித்தார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஒரு புகைப்படமாவது வெளியிட்டு இருக்கலாமே என்கிறார்கள். அவர் ஒரு பெண்மணி, சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று அவர் கருதி இருக்கலாம். மற்றப்படி இந்த வி‌ஷயத்தில் இதற்கு மேல் பேச விரும்பவில்லை.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுத்தது நான். இது தொடர்பாக பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து மனு கொடுத்தேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த மனுவில் கையெழுத்திட்டார். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருவதாக அறிகிறேன். அது மகிழ்ச்சி அளிக்கிறது. அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவை பிரதமர் மோடி பார்க்க வேண்டும் என்றும் அவரிடம் கூறினேன்.

கருப்பு பண விவகாரத்தில் நரேந்திரமோடி நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதனால் மக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டு இருப்பதை பிரதமரும் ஒப்புக்கொண்டுள்ளார். நானும் கூறியிருக்கிறேன். தமிழக மீனவர்களின் படகுகளை நாட்டு உடைமையாக்குவோம் என்று இலங்கை மந்திரி கூறுகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு தைரியம். இதற்கு இந்திய அரசு அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்வது தான் காரணம்.

ரூ.25 லட்சம்

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. இது வேதனை அளிக்கிறது. பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

Next Story