டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக டிடிவி தினகரன் நியமனம் செய்யபட உள்ளார்?


டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக டிடிவி தினகரன் நியமனம் செய்யபட உள்ளார்?
x
தினத்தந்தி 2 March 2017 10:31 AM GMT (Updated: 2 March 2017 10:31 AM GMT)

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது

சென்னை


ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன்பிறகு கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அமைச்சர் செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்டன.

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது கட்சியின் விதிகளுக்கு முரணானது என்று தேர்தல் ஆணையத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் தலைமையிலான அணி புகார் அளித்து இருந்தது. தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு சசிகலா தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிமுக தரப்பில் இருந்தோ, தமிழக அரசின் சார்பிலோ எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. கடந்த வாரம் டெல்லிக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தினகரனும் சென்று இருந்தார். முதல்வர் சென்னை திரும்பிய நிலையில், தினகரன் திரும்பவில்லை. டெல்லியில் தங்கி இருந்தார் என்று கூறப்பட்டது.

டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி என்பது கேபினட் அந்தஸ்து கொண்டது. இவர் டெல்லியில் தங்கியிருந்த தமிழகத்திற்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இருப்பார். மேலும், தமிழகத்தின் தலைமை செயலகத்துக்கு சென்று, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் பார்க்கும் அதிகாரமும் பெறுகிறார். இதைத் தான் சசிகலா தரப்பும் விரும்புகிறது. அரசு செயல்பாடுகள் என்ன, அரசின் முக்கிய நடவடிக்கைகள் தனது குடும்பத்திற்கு தெரிய வேண்டும் என்பதே சசிகலாவின் எண்ணம். இதற்காக இந்தப் பொறுப்பிற்கு தினகரன் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பொறுப்பு கேபினட் அந்தஸ்து கொண்டது என்பதால் மாநில கவர்னர் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தினகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கவர்னர் அனுமதி வழங்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் அரசு செயல்பாடுகளை அருகில் இருந்து கவனிக்கும் வகையில் தனது குடும்பத்தினரின் பங்கு இருக்க வேண்டும் என்று சசிகலா விரும்புவதால் தினகரன் இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட உள்ளார் என கூறப்படுகிறது.

Next Story