செல்லூர் ராஜூ பேசும் போது தெர்மாகோல் தெர்மாகோல் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல்


செல்லூர் ராஜூ பேசும் போது தெர்மாகோல் தெர்மாகோல் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல்
x
தினத்தந்தி 14 Jun 2017 6:10 AM GMT (Updated: 14 Jun 2017 6:10 AM GMT)

செல்லூர் ராஜூ பேசத்தொடங்கியபோது தி.மு.கவினர் தெர்மாகோல் தெர்மாகோல் என்று கத்தியதால் சட்டப்பேரவை அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

சென்னை

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை தொடங்கியது.மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செ. ஆறுமுகம், தங்கராசு, பெரியசாமி, நடராசன், சி.சு.மணி, த.ஆறுமுகம் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கபட்டது. தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.பின்னர்
உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் கூட்டுறவுத்துறைக் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, எம்எல்ஏ செங்குட்டுவன், கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளில் திருட்டு சம்பவம் நடைபெறுவதால் சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்றும், நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு வேளாண் வங்கிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் சுற்றுச்சுவர் எழுப்பப்படும். 4 லட்சத்து 65 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் பாதுகாப்பாகவே உள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 677 கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கு 66 ஆயிரம் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருந்தபோது தெர்மாகோல் தெர்மாகோல் என்று கூறி எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

Next Story