டாஸ்மாக் மதுபான கடை திறப்பதை கிராம சபை தீர்மானம் கட்டுப்படுத்தாது ஐகோர்ட்டு உத்தரவு


டாஸ்மாக் மதுபான கடை திறப்பதை கிராம சபை தீர்மானம் கட்டுப்படுத்தாது ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Jun 2017 11:00 PM GMT (Updated: 15 Jun 2017 8:02 PM GMT)

கிராம சபையில் இயற்றப்படும் தீர்மானம் எந்த வகையிலும் டாஸ்மாக் மதுபான கடையை திறப்பதை கட்டுப்படுத்தாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் விக்னேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுபான கடை

பொன்னேரி தாலுகா, தடபெரும்பாக்கம் கிராமம் 11 ஆயிரம் மக்கள் தொகை கொண்டது. ஏற்கனவே, இங்கு ஒரு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. அதுவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக, திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது, மற்றொரு மதுபான கடையை குடியிருப்பு பகுதியில் திறக்க டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் கிராமத்தில், மதுபான கடை திறக்கக்கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் முடிவு செய்து, கடந்த மே 1-ந் தேதி தீர்மானமும் இயற்றப்பட்டது.

இழுத்து மூடவேண்டும்

கிராம சபையில் இதுபோல தீர்மானம் இயற்றினால், அதை மீறி கடையை திறக்கக்கூடாது என்று இந்த ஐகோர்ட்டின் டிவிசன் பெஞ்சு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, எங்கள் கிராமத்தில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மதுபான கடையை இழுத்து மூட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக, மாநில நெடுஞ்சாலையோரம் மதுபான கடை திறக்கப்படவில்லை’ என்று கூறினார்.

கட்டுப்படுத்தாது

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி நெடுஞ்சாலை அருகே மதுபான கடை திறந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாரர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர உரிமை உள்ளது.

மேலும், தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடை மற்றும் பார்) சட்டத்தின்படி தான், டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகின்றன. இந்த சட்டத்தை மீறி மதுபான கடை திறக்கப்பட்டால், அதை எதிர்த்து மனுதாரர் வழக்குதொடர உரிமை உள்ளது. ஆனால், கிராம சபையில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மதுபான கடை திறக்கப்படுகிறது என்று மனுதாரர் கூறமுடியாது. கிராம சபை தீர்மானம், மதுபான கடையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

Next Story