மத்திய அரசு குறிப்பிடும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் சட்டசபையில் அமைச்சர் தகவல்


மத்திய அரசு குறிப்பிடும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் சட்டசபையில் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2017 10:15 PM GMT (Updated: 15 Jun 2017 8:18 PM GMT)

மத்திய அரசு குறிப்பிடும் இடத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று சட்ட சபையில் அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஜெ.அன்பழகன் (தி.மு.க.), ‘மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அமையும்’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தார். மத்திய அரசின் கொள்கை என்னவென்றால் வளர்ச்சி அடையாத மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தான்.

5 இடங்கள் தேர்வு

ஆனாலும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர ஜெயலலிதா எடுத்த முயற்சியின் காரணமாக, இன்றைக்கு அந்த பலனை நாம் அனுபவிக்க இருக்கிறோம். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 200 ஏக்கர் இடம் அவசியம் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருந்தது.

அதன் அடிப்படையில் அரசு செயலாளர்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் பேசி இறுதியாக செங்கல்பட்டு, பெருந்துறை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, ஆய்வுக்கு அனுப்பியது.

மத்திய அரசு குறிப்பிடும் இடம்

இப்போது கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் மாவட்டத்தில் எத்தனை கல்லூரிகள், பள்ளிகள் உள்ளது என்று கேட்டுள்ளனர். முதல்-அமைச்சரின் நோக்கம் என்னவென்றால் தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். அது எந்த மாவட்டத்துக்கு வந்தாலும் பரவாயில்லை என்பதுதான்.

மாநில அரசை பொறுத்தவரை எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மத்திய அரசு எந்த விவரம் கேட்டாலும் மாநில அரசு உடனே அனுப்பி வைக்கிறது. எனவே மாநில அரசின் இந்த பணியில் எந்த தொய்வும் இல்லை. மத்திய அரசு குறிப்பிடும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். மத்திய அரசு எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தாலும் வரவேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story