எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் விவகாரம் சட்டசபையில் இன்றும் தி.மு.க. வெளிநடப்பு


எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் விவகாரம் சட்டசபையில் இன்றும் தி.மு.க. வெளிநடப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 8:26 AM GMT (Updated: 16 Jun 2017 8:26 AM GMT)

எம்.எல்.ஏ.க்கள் பண பேரம் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்றும் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

சென்னை,

14-ந்தேதி சட்டசபை கூட்டம் தொடங்கியதில் இருந்து எம்.எல்.ஏ.க்களுக்கு குதிரை பேரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தி வருகிறார்.

முதல் நாள் கூட்டத்தில் இந்த விவகாரம் கூச்சல்- அமளியில் முடிந்தது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்றும் இதே விவகாரத்தை மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் எழுப்பினார். ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆதாரம் இல்லாத எந்த விஷயம் குறித்தும் சபையில் விவாதிக்க சட்டமன்ற விதிப்படி அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் தனபால் நேற்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் எழுந்து அதே பிரச்சினையை கிளப்பினார். ஆதாரத்தை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதுபற்றி அவர் சில கருத்துக்களை சொன்னார். அதற்கு சபாநாயகர் விளக்கம் அளித்தார். துரைமுருகனும் பேசினார்.

இந்த விவாதத்தின்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார் ஒரு கருத்தை சொன்னார். இதையடுத்து மு.க.ஸ்டா லின் உள்ளிட்ட அனைவரும் பேசிய கருத்துக்கள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபை வளாகத்தில் பேட்டி அளித்த துரைமுருகன் கூறும் போது சபாநாயகரின் சர்வாதிகார போக்கு கண்டிக்கத்தக்கது என கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:-

வீடியோ தொடர்பான ஆதாரத்தை அளித்தும், சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. எம்எல்ஏ.க்கள் தொடர்பான வீடியோவால் தமிழகத்திற்கே அவமானம்.

Next Story