4 ஆண்டுகள் நீடிப்பது பற்றி எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்; அ.தி.மு.க. ஆட்சி கலைப்பு இல்லை


4 ஆண்டுகள் நீடிப்பது பற்றி எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்; அ.தி.மு.க. ஆட்சி கலைப்பு இல்லை
x
தினத்தந்தி 10 July 2017 12:30 AM GMT (Updated: 9 July 2017 10:00 PM GMT)

தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது.

சென்னை,

சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியும், முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதில் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் சென்னை வந்த மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நேற்று டெல்லி திரும்புவதற்காக விமானநிலையம் வந்த போது, அவரிடம் “ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு கலைத்துவிடும் என்று வதந்தி நிலவுகிறதே?” என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு வெங்கையா நாயுடு பதில் அளிக்கையில், இது முழுக்க முழுக்க வதந்தி தான் என்றும், இதில் சிறிதளவு கூட உண்மை கிடையாது என்றும் கூறினார்.

அத்துடன், மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழகத்தில் உள்ள ஆட்சியை ஒருபோதும் கலைக்காது என்றும், மாநில அரசுகளை கலைக்க வகை செய்யும் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை மத்திய அரசு ஒருபோதும் தவறாக பயன் படுத்தாது என்றும், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிப்பது பற்றி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க் களே முடிவு செய்வார்கள் என்றும் அப்போது வெங்கையா நாயுடு தெரிவித்தார்.


Next Story